ஆமை இரத்தம் குடித்து உயிர் வாழ்ந்த மீனவர்கள்

ஆமை இரத்தத்தை தினமும் குடித்து இறந்த சக மீனவரின் பூதவுடலை ஆறு நாட்களாக உடன் வைத்திருந்தோம் என கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணமால் போயிருந்த நிலையில், 22 நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை கரை திரும்பியிருந்தனர்.

சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ), ஆகியோரே இவ்வாறு கரை திரும்பியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தினூடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் தத்தமது வீட்டிற்கு சென்றனர்.

குறித்த மீனவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, இறந்த சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 47) என்பவர் 10 நாட்களின் பின்னர் இறந்ததாகவும் அவரின் உடலை தாங்கள் 6 நாட்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவருடைய பூதவுடலை கடலில் எறிந்ததாகவும் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தம்மை எந்தவொரு அமைச்சர்களோ சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளோ வந்து சந்திக்கவில்லையென்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாமையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும் உடமையிழப்புகளும் நிகழ்கின்றன என்றும் உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments