இரும்பக உரிமையாளர் கொலை சந்தேக நபரை 48 மணி நேரம் விசாரிக்க உத்தரவு

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டும் என்றும் இந்த கொலையின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த சந்தேகநபரின் சட்டத்தரணி வினோராஜ், பிணை வழங்க மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளைத் துரிதப்படுத்த பொலிஸாரை அறிவுறுத்தியதுடன், சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். அத்தோடு வழக்கு விசாரணைகள் நாளைமறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

கோண்டாவில் லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் திகதி வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்ததிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 30ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.

பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்கள் இருவரில் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் கிளிநொச்சியில் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments