சாகும் வரை போராடுவோம்?
எமது இரத்த உறவுளை இழந்த நாம் நீதி கிடைக்கும் வரைபோராடுவதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகளில்லை. எமது உயிர் இருக்கும் வரை நாம் போராடிக் கொண்டேயிருப்போம என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் அறிவித்துள்ளன.
எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கு தமிழ் மக்களின் பொது விவகாரமாக இருந்த விடுதலைப் போராட்டமே காரணம். எனவே காணாமலாக்கப்பட்ட உறவுகள் பற்றிய விவகாரம் தமிழ் மக்களின் பொதுவிவகாரமாகும். இந்த விவகாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ் சமூகத்திற்கு உரியது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உரியது.
துரதிஸ்டவசமாக இந்த விடயத்தில் அரசியல் தலைமைகளின் அககறையோ, தமிழ்ச் சமூகத்தின் அக்கறையோ போதிய அளவில் இல்லையெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச சிறுவர் தினமான இன்று வடகிழக்கு தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்பில் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குடும்பங்கள் இதனை தெரிவித்துள்ளன.
எமது உறவுகளை படையினரிடம் நாங்களே கையளித்தோம். அதற்கான கண்கண்ட சாட்சியங்கள் நிறையவே உள்ளன. முறையானவிசாரணை நடாத்தப்பட்;டு உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.
சர்வதேச விசாணை ஒன்றின் மூலமே,முறையான நீதி எங்களுக்குக் கிடைக்கும். எனவே இந்த விவகாரத்தில் சர்வதேசவிசாரணையை நாம் கோருகின்றோம். நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுத்தால் சர்வதேச விசாரணை சாத்தியமாகாத ஒன்றல்ல. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு கண்துடைப்பு. இந்த அலுவலகத்தினால் எந்த வித பயனும் கிடைக்கப்போவதில்லையெனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
Post a Comment