நாம் வென்றால் உடனடித் தீர்வு! யாழில் வைத்து அநுர சபதம்

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடைய வைத்தால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுப்பு பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட "மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம்" எனும் தொனிப் பொருளில் அமைந்த நிகழ்வு நேற்று (02) யாழ்ப்பாணம் - ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சாதாரணமான மக்கள் ஒரு ஜனாதிபதி தேர்தலை தமது தேர்தலாக நினைப்பார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தல் என்பது தெற்கு கட்சிகளிற்குள், அவர்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் என யாழ் மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். சில தருணங்களில் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் பங்களிக்கவில்லை. மற்றைய தேர்தலை போல, ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களுக்கு உற்சாகமில்லை. ஏனென்றால், உங்களின் பார்வையில் அது தெற்கு கட்சிகளின் பலத்திற்கான போட்டியாகும். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் தலைமைதான் உங்களது, எங்களது தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது.

எனவே இந்த தேர்தலை புறக்கணிக்க முடியாது. எங்களின் எதிர்காலம், எங்களது குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. உங்களிற்கு மிக முக்கியமான தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை பார்க்கிறோம். வடக்கில் இந்த தேர்தல் முக்கியமல்ல, தெற்கின் கட்சிகள் போட்டியிடுகின்றன என நீங்கள் நினைக்கிறீர்கள். நாங்கள் தற்காலிகமாக அந்த நினைப்பு சரியென கருதுவோமானால், வடக்கின் மக்கள் தெற்கின் எந்த கட்சியை தேர்வு செய்ய வேண்டும். தெற்கின் இரண்டு பிரதான கட்சிகளும் இதுவரை நாட்டை நிர்வகித்தன. அவை நாட்டில் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தின. எமது நாட்டில் கொடுமையான நிலையை ஏற்படுத்தினார்கள். ஊழல், மோசடி மற்றும் திருட்டை வழமையாக மாற்றியது. குழந்தைகள் கல்விகற்க சரியாக பாடசாலை இல்லாமல் போனது.

தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளினால் இது நடந்தது. எம்மையும் தெற்கின் அரசியல் கட்சியென நீங்கள் சொல்லக்கூடும். நாம் தெற்கின் அரசியல் கட்சியல்ல. நாம் வடக்கில் உங்களுடன் நெருக்கமாக வேலை செய்ய விரும்புபவர்கள். யுத்தம் முடிந்ததும் எமது முழுநேர அரசியல் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய ஆரம்பித்தனர். எங்களுடன் வடக்குடன் அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது..

இந்த வடக்கில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி உருவாகுமென்ற நம்பிக்கையுள்ளது. வடக்கின் மக்கள் எப்படியான தெற்கின் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்?. பழைய, தேவையை அறியாத, எமது தேசத்தையும் மக்களையும் பாதாளத்தில் தள்ளிவிழுத்தி விட்ட கட்சிகளை தேர்ந்தெடுக்காமல் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளை செய்யவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

யுத்தத்தின் போது வடக்கு மக்கள் பிரதானமாக இன்னல்ப்பட்டனர். ஆயுதம் தாங்கிய குழுக்களிற்கிடையில் மோதல் இருந்தது. இந்திய ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்டது. யுத்தத்தின் போது இராணுவத்தின் செயற்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டது. எப்போது செல் விழும், குண்டு வெடிக்கும் என்பது தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கையிருந்தது. எமக்கு அது தொடர்பான குற்ற உணர்வுள்ளது. யுத்தத்தின் போது வடக்கிலுள்ள சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்பங்களில் முக்கியமான அரசியல் கட்சியாக கண்ணோட்டத்தை செலுத்தியிருக்க வேண்டும்.

முடிந்தளவு செயற்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையான குற்ற உணர்ச்சி எங்களிற்கு உள்ளது. தெற்கிலிருந்து எம்மால் செய்யப்பட வேண்டியவற்றை செய்யாத குற்ற உணர்ச்சி எம்மிடமுள்ளது. ஆனால், இப்பொழுது இங்கிருந்து எப்படி தொடர்வது? முக்கியமாக யுத்தத்தை மையப்படுத்தி பிரதான பிரச்சினைகளிற்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். தமது குழந்தை, கணவர் காணாமல் போயுள்ளனர். மரணத்தை விட காணாமல் போதல் வேதனையானது என்பதை நான் அறிவோம். எனது அண்ணனும் காணாமல் போனார். எனது தாய், தந்தையர் அது தொடர்பாக படும் வேதனை தொடரபான அனுபவம் எனக்கு உள்ளது.

இன்று வீடு வருவாரோ, நாளை வீடு வருவாரோ பாரிய எதிர்ப்பார்ப்புடன் தசாப்தங்களாக காத்திருக்கும் வேதனையை நாம் அனுபவித்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவர் சம்பந்தமாக உண்மையை அறிந்து கொள்ளவும், நீதியை நிலைநாட்டவும் மக்களுக்கு உரிமையுள்ளது. காலத்தினாலோ, ஞாபக மறதியினாலோ அழிக்கப்பட முடியாத பிரச்சினை. உங்களது குழந்தைகள், உங்களது கணவர்கள் தொடர்பாக உண்மை நிலையை உங்களிற்கு அறியத்தரும் பொறுப்பை நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்ற உறுதிமொழியை தருகிறோம்.

20, 30 வருடங்களாக கைது செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள். வெலிக்கடை சிறைச்சாலையில் என்னை அப்படியான ஒருவர் சந்தித்தார். சிலருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவே 20 ஆண்டுகளிற்கு மேல் சென்றது. ஆனால் அவர் செய்திருக்கும் தவறிற்கு உச்சபட்ச தண்டனையே 7 ஆண்டுதான். அவர் 20 வருடமாக விளக்கமறியலில் இருக்கிறார். இது நீதியானதா? இந்த நியாயம் எந்த அடிப்படையிலானது? இது அடிப்படை நியாயத்திற்கு புறம்பானது.

யுத்தத்தின் பின் புலிகளின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். அவர் ஒருநாள் கூட விளக்கமறியலில் இருக்கவில்லை. அவர் ஒருநாள் கூட நீதிமன்றத்தின் முன் நிற்கவில்லை. ஏன்?. அவருக்கு மக்கள் பணம் இருந்தது. வங்கிக் கணக்குகள் இருந்தது. அப்படியென்றால் நீதியென்பது வங்கிக்கணக்கின் விசாலத்தன்மையை பொறுத்ததா? அவரிடமிருந்த கப்பல்களின் எண்ணிக்கையில் நீதி தீர்மானிக்கப்படுமென்றால் அது எந்தவகையில் நியாயம்?

வெலிக்கடை சிறையில் ஒரு இளைஞனை சந்தித்தேன். புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த அடையாள அட்டையில் கையொப்பமிட்டிருந்தது தயா மாஸ்டர். தயா மாஸ்டர் சுதந்திரமாக வெளியில் உள்ளார். ஆனால் அடையாள அட்டையை வைத்திருந்தவர் சிறைச்சாலையில் உள்ளார். இதை எப்படி நியாயப்படுத்துவது?. அதனால், அரசியல்கைதிகளை உடனடியாக விடுவிக்கப்படும் செயற்பாட்டை ஆரம்பிப்போம் என்ற உறுதிமொழியை தருகிறோம்.

பணக்கஷ்டம் ஏற்படும்போது திருமண மோதிரத்தையும், நகைகளையும் அடகு வைப்போம். ஆனால் இடத்தை அடகு வைக்க மாட்டோம். இடம் எமது சொத்து மட்டுமல்ல மக்களின் கலாச்சாரத்தின் அடையாளம். அது எமது உறவு. சொந்தம். ஆனால் 30 வருடமாக இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையத்தை உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டது எதற்காக?. பலாலியை தாக்கும் பாரிய ஆயுதங்கள் புலிகளிடம் இருந்தது. இதனால் பலாலியை சுற்றி பெருமளவு நிலம் அபகரிப்பப்பட்டது. இப்போது யாரிடம் அப்படியான ஆயுதங்கள் உள்ளது? அரசை தவிர வேறு யாரிடமும் இல்லை. அப்படியானால் ஏன் அந்த நிலங்களை இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. தனது நிலத்தை பெற்றுக்கொள்ளும் நியாயமான உரிமை அந்த மக்களிற்கு உண்டு. அது ஒத்திவைக்க முடியாத பிரச்சினை.

சரியாக அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட காலத்திற்கு அமைவாக நஷ்டஈடு வழங்கப்படும். உங்கள் நிலம் அரசாங்கத்தால் 30 வருடத்திற்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததால் நஷ்டஈடு வழங்கப்படும். நான் பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அந்த வீடுகளில் பலா, தேக்கு மரங்கள் வளர்ந்திருந்தன அந்த வீடுகளை புனரமைக்கவும் நஷ்டஈடு வழங்கப்படும். அதுதான் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் தலைமைத்துவத்தின் கடமை. 45,000 மேலான விதவைகள் உள்ளனர். தாய் தந்தையர் இருவரையும் இழந்த 2,500 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன? அவர்களுடைய ஜீவனோபாயம் என்ன? யுத்தத்தினால் மாபெரும் சமூக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டிய பொறுப்புள்ளது. - என்றார்.

No comments