மலேசிய தடுப்புக் காவலில் 9,000 வெளிநாட்டினர்

மலேசியா எங்கும் உள்ள 14 குடிவரவுத் தடுப்பு மையங்களில் 9,532 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட இவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் வரும் இவர்கள் இதே மையங்களில்

தொடர்ந்து வைக்கப்பட்டு இருப்பார்கள் எனச் சொல்லப்படும் நிலையில் இதனை நிர்வகிப்பதற்கான செலவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இத்தடுப்பு மையங்களில் உள்ள வெளிநாட்டினருக்கு உணவளிக்க மாதந்தோறும் 3.5 மில்லியன் மலேசிய ரிங்கட்களை மலேசிய அரசு செலவிடுவதாகக் கூறியிருக்கிறார் குடிவரவு இயக்குனர் கைரூல் டசைமீ தயுட்.  இதில மருத்துவம், பராமரிப்பு செலவுகள் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ள நிலையில், அச்செலவுகள் மேலும் பல மில்லியனை எட்டும் எனச் சொல்லப்படுகின்றது.

ஒருவர்  குடிவரவு மையத்தில் வைக்கப்பட்டிருப்பது அவரது ஆவணங்கள் பரிசீலணை மற்றும் சிறைத்தண்டனையை பொறுத்தது என குடிவரவு இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக நாடுகடத்தலுக்கான ஆவண பரிசீலணைக்கு மூன்று வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும் எனப்படுகின்றது.

மலேசியா எங்கும் உள்ள 14 குடிவரவு தடுப்பு மையங்களில் ஒரே சமயத்தில் 13,000 பேரை தடுத்து வைக்குமளவுக்கு இட வசதி உள்ளது.

“அனைத்து பரிசீலணைகளும் குடிவரவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்டவரின் நாட்டு தூதரகத்தை உள்ளடக்கி இருக்கும். தடுப்பில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்,” என குடிவரவுத்துறை இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலேசிய குடிவரவுத்துறையின் கணக்குப்படி, கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 41,041 பேர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

No comments