புலிகள் அழிக்கப்பட்ட நாள் முரளிக்கு பொன் நாளாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதியாக அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும். கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும். இலங்கையில் சில விடையங்களை சாதித்த, மக்களை பாதுகாக்கக் கூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளிற்கு வாய்ப்புக்கள் கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்.

அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம். 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டன. அனைத்தும் அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார். அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன்.

இரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது. பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர். நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது.

தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர். மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம். அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன். - என்றார்.

No comments