புலம்பெயர்ந்தவர்க்கு செப்டம்பர் 20 ?


வடக்கில் முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அடையாளம் காண மீண்டும் பதிவுகளிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் புலம்பெயர் தேசத்திலுள்ள உறவுகள் எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் 'காணி கோரல் ' வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வடக்கு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஏற்கனவே ஆளுநரினால் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுக்கொண்டிருக்கின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக்கொள்கின்றோம். குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;.

No comments