தடை தகர்த்து லிங்கேஸ்வரருக்கு பொங்கல்


நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவின் இறுதி நாள் இன்று (13) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது பல்வேறு பகுதிகளிலும் இருந்து பொங்கல் விழாவிற்கு பெருமளவானவர்கள் வந்திருந்தனர்.

ஆலய வழிபாட்டிற்கு தடை ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவற்றை மீறி இம்முறை பொங்கல் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 4ம் திகதி ஆரம்பமாகிய வருடாந்தப் பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலுமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன.

இன்று அதிகாலை மடப்பாண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இறுதி நாள் பூஜை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் மற்றும் யாழ் பல்கலைகழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பொதுமக்களின் விடாமுயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டிருந்தது. எனினும், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரால் விதிக்கப்பட்ட தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது.



No comments