நியமனம் வழங்கல் ஒத்திவைப்பு; போராட்டம் நிறுத்தம்!

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் உறுதிமொழியையடுத்து சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு இன்று ஆளுநர் தலைமையில் நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் இன்று காலை சாவகச்சேரியில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இதனையடுத்து சுகாதாரத் தொண்டர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

No comments