போரினால் பாதிக்கப்பட்டோருக்காக செயற்கை கை உருவாக்கும் மாணவன்


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் போர்ப் பகுதியில் வாழ்ந்து தற்பொழுது பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்  மாணவன் ஒருவர் போரின் போது கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.

2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் அருகாமையில் இடம்பெற்ற சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இதில் இருவர் கொல்லப்பட்டனர். அன்றைய நாள் இவரின் தந்தை மற்றும் ஏனையோரை உடையார்கட்டு மருந்தகத்தில் இயங்கி வந்த நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு வரும் போது அவ்விடத்தில் நின்ற நான் (சுரேன்) இப்புகைப்படத்தினை எடுத்திருந்தேன். (துசாபனின் தந்தையை உழவு இயந்திரத்தில் இருந்து இறக்கும் காட்சி)

போரின் போது கண் முன்னே கண்ட அவல காட்சிகள் துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. மே 16 2009 வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்திருந்த துசாபன், போர்க்காலப் பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் தனது நேரத்தினை கடந்த ஆண்டுகளில் செலவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டுள்ளார். தனது கல்வி முறுவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் செய்து கொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் எவ்வாறு செய்ய முடியும் என்று தற்பொழுது ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்.

பதிவு - சுரேன் கார்திகேசு

No comments