கொடூர கொலையாளிகளை 12 மணி நேரத்தில் சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்
பாதாள உலகக் குழுக்களிடையே பழி தீர்க்கும் படலம் மீள தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன் படி நேற்று முன் தினம் இரவு ஹங்வெல்லை நகரில் எம்புல்கம சந்தியில் ஒருவர் சுட்டும் வெட்டியும் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த சந்தியில் வடை வர்த்தகம் செய்யும் அப்பாவி இளைஞர் ஒருவரும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய இலக்கு வைக்கப்பட்ட பிரதான நபரும் படு காயமடைந்துள்ளனர்.
தற்போது மூன்று கொலைகள், ஒரு கொலை முயற்சி, நவகமுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியல் உத்தரவின் கீழ், அங்குகொலபெலஸ்ஸ சிறையில் உள்ள பாதாள உலகக் குழுவொன்றினை வழி நடாத்தும் தினித் மெவன் மாபுல என்ற ஊறுஜுவா இந்த தாக்குதலை வழி நடத்தியுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் 7 பேரில் உள்ளடங்கும் ஐவரையும், தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய ஒருவரையும் 12 மணி நேரத்துக்குள் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மற்றொரு பாதாள உலக குழுவை வழி நடத்திய இந்துனில் வஜிர குமாரவையே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையிலும், காயமடைந்த அப்பாவி இளைஞரான 27 வயதான பாலசுப்ரமணியம் ஜீவன் அவிசாவளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஹங்வெல்லை பொலிஸ் நிலையத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை அவர் நடத்திய நிலையில் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்தினார். அதன்படி குறித்த சம்பவம் சுருக்கமாக வருமாறு:
‘ஹங்வெல்ல – எம்புல்கம சந்திக்கு இருவர் நேற்று காரில் வந்துள்ளனர். அவர்கள் காரிலிருந்து இறங்கும் போது, சிறிய ரக வேன் ஒன்றிலும் இரு மோட்டார் சைக்கிள்களிலும் வந்த குழுவொன்றினால் துப்பாக்கிச் சூடும் வாள் வெட்டும் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 23 வயதான சுரேஷ் ருவந்த குணசிங்க எனும் இளைஞர் படு காயமடைந்த நிலையில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார். காரை செலுத்தி வந்த பாதாள உலக குழு தலைவன், 26 வயதான இந்துனில் வஜிர குமார படு காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பல கொலை குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரேயே பிணையில் வெளியே வந்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே சம்பவம் இடம்பெற்ற சந்தியில் வடை விற்கும் அப்பாவி இளைஞர் ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 இற்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் ஹங்வெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, நவகமுவ பொலிஸாருக்கு சந்தேக நபர்கள் பயணித்த வேனின் இலக்கம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அது ஹங்வெல்லை பொலிசாருக்கு பரிமாற்றப்பட்டு வேனின் உண்மை உரிமையாளர் கண்டறியப்பட்டுள்ளார். கொலன்ன பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே அவ்வேனின் உரிமையாளர் என்ற நிலையில் கொலன்ன பொலிஸார் அப்பெண்ணின் முகவரியில் சென்று விசாரித்துள்ளனர்.
இதன்போது, அப்பெண் வீட்டில் இருக்காத நிலையில் அவரது கணவர் பதிலளித்துள்ளார். இற்றைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அந்த வேனை 40 ஆயிரம் ரூபா மாத வாடகை அடிப்படையில் பியகம பகுதியில் வாகன வாடகை நிறுவனம் ஒன்றுக்கு கையளித்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பியகம பொலிஸாருடன் ஹங்வெல்லை பொலிஸார் பியகமவில் உள்ள குறித்த வாகன வாடகை நிறுவனத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். குறித்த வேன் நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தப்பட்டு 3000 ரூபா நாள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. வேனை பெற்றவர், சந்தேக நபர்களில் ஒருவரின் சகோதரனின் அடையாள அட்டையை சமர்ப்பித்தே வேனைப் பெற்றுள்ளார். இந்த தகவல்களுக்கு மேலதிகமாக, அந்த வேனில் ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளமையையும் பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து விசாரணைகள் ஜீ.பீ.எஸ். தொழில் நுட்பம் ஊடே முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, குறித்த வேன், தலங்கம பொலிஸ் பிரிவில் குமாரகே வத்த பகுதியில் கட்டப்பட்டு வரும் இரு மாடி வீடொன்றுக்கு முன்பாக இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். அங்கு சென்ற பொலிஸார், அந்த வீட்டில் பிரதான மேஸ்திரிக்கு கையுதவியாளர்களாக இருந்த இருவரைக் கைது செய்து விசாரித்த போது, அதில் ஒருவர் கொலையுடன் நேரடியாகவும் மற்றையவர் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவ்வேனை மீட்ட பொலிஸார், அங்கு உதவி ஒத்தாசை புரிந்த நபரிடம் இருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளொன்றினையும் மீட்டனர். ஜல்தர, ரணால பகுதியைச் சேர்ந்த சமில நிஷாந்த, ரணில் அல்மேதா ஆகிய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இதனிடையே, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், கடுவலை நகர சபைக்கு அருகில் உள்ள பெரேரா குறுக்கு வீதியின் அருகில் உள்ள பாழடைந்த இடத்தில் இருந்து இக்கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஜல்தர, ரணால பகுதியைச் சேர்ந்த கயான் மதுசங்க அத்தநாயக்க, என்பவரும் நயன குமார முணசிங்க என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். கயானிடமிருந்து 9 மில்லி மீற்றர் ரக தோட்டாக்கள் பயன்படுத்தத் தக்க உள் நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மூன்று தோட்டாக்களும் ஒரு வெற்றுத் தோட்டாவும் இதன்போது கிடைத்துள்ளன. மற்றையவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அதிரடிப் படையினர் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் கொலையுடன் நேரடியாக தொடர்புபட்ட மேலும் இருவர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுடைய சானுக சாலிந்த சில்வா, தொன் நதுன் சானக ரத்நாயக்க ஆகிய குறித்த இருவரையும் அதிரடிப் படையினர் தொம்பே, பலலகம பகுதியில் வைத்து நேற்று நண்பகல் கைது செய்தனர்.
அதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் 5 பேரும் உதவி ஒத்தாசை வழங்கிய ஒருவருமாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையுடன் நேரடியாக 7 பேர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேரடியாக தொடர்புபட்ட மேலும் இருவரும் உதவி ஒத்தாசை புரிந்த ஏனையோரையும் கைது செய்ய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment