பயங்கரவாதியின் உடற்பாகம் புதைக்கப்பட்டது


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி நசார் முகமட் அஷாத்தின் உடற்பாகங்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது.

தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அரச செலவில் புதைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மட்டக்களப்பு – புதூர், ஆலையடிச்சோலை மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், மக்களின் எதிர்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

பின்னர் மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, புதைக்கப்பட்ட உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்பட்டன.

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை, மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையுடன் உரிய இடத்தில் புதைக்குமாறு நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் உடற்பாகங்கள் இன்று புதைக்கப்பட்டன.

No comments