தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனத்துவேச வெளிப்பாடா! முல்லைத்தீவு சம்பவம் குறித்து சீமான் வேதனை;

முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடாகவும்  மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கான அறிகுறி என நாம் தமிழர் கட்சி சீமான்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இலங்கை  நாட்டின் முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அங்கு விகாரை அமைத்துத் தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் எனும் பித்தப் பிக்கு புற்றுநோயால் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கோயில் வளாகத்துக்குள்ளேயே எரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. இது அங்கு வாழும் தமிழ் மக்களிடையே தேவையற்றப் பதற்றத்தையும், பெரும் பீதியையும் உருவாக்கி இரு இன மக்களிடையே மோதல் நிகழ்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது.

புத்தப் பிக்குவின் உடலை கோயில் வளாகத்திற்குள் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் தடையாணையைப் பெற்றப் பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது காவல்துறையின் கண்முன்னே அவர்களின் துணையோடே பௌத்தப் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அநீதியைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர்களும், கோயில் நிர்வாகிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் சிங்கள வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் தொடர்ச்சியான வன்மத்தின் வெளிப்பாடாகவே நிகழ்ந்திருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தினை தொடர்ந்து நிலைநாட்டவும், சிங்களமயமாக்கலைத் துரிதப்படுத்தி செயற்படுத்தவும் முல்லைத்தீவில் நடைபெற்ற இச்சம்பவமானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தமிழர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறியே இச்சம்பவம் என்பதைப் பன்னாட்டுச் சமூகம் உணர வேண்டுமென அங்கிருக்கும் தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் கருத்துவெளியிட்டிருக்கிறார்கள். இதுவே ஈழ நிலத்தில் இன்று நிலவும் சூழலாகும். தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் இத்தகைய அநீதிகள் யாவும் தமிழர்கள் மீதான சிங்கள இனப்பகையின் விளைவாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவையே! ஓர் இனப்படுகொலையை நடத்தி முடித்து இரண்டு இலட்சம் உயிர்களைப் பலியெடுத்தப் பிறகும் சிங்களப் பேரினவாதம் தனது கோரப்பசி அடங்காது இன்னும் தமிழ் உயிர்களைக் காவு வாங்கத் துடிக்கிறது என்பதன் மூலம் தமிழர்களும், சிங்களர்களும் இலங்கை எனும் ஒற்றை நாட்டுக்குள் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை உலகத்தினர் உணர வேண்டும். தமிழ்த்தேசிய இன மக்களுக்கு எதிராக நிகழும் இத்தகையப் பேரவலத்திற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது எட்டுகோடித் தமிழர்களை உள்ளடக்கி வாழும் இந்தியப் பேரரசின் தார்மீகக் கடமையாகும். அதற்குரிய அழுத்தத்தைத் தமிழக அரசானது இந்தியப் பெருநாட்டை ஆளும் பாஜக அரசிற்குத் தர வேண்டும் என இத்தருணத்தில் மீண்டுமொரு முறை நினைவூட்டுகிறேன்.

ஆகவே, சர்வதேசச் சமூகமும், ஐ.நா. பெருமன்றமும் இனியாவது ஈழ நிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு ஒரு சுதந்திரமான எவரது தலையீடுமற்றப் பன்னாட்டு விசாரணையை நடத்தி, ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments