400 அரசியல் பிரமுகர்கள் வீட்டுச் சிறையில்! ராகுல்காந்தி குழுவினரை திருப்பி அனுப்பிய காஷ்மீர்!

காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில நிர்வாகம் அனுமதிக்காமல் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பியது.
ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர்.
முன்னதாக, ஜம்மூ காஷ்மீரின் தொலைதொடர்பு மற்றும் பொது விவகாரத் துறை தனது ட்வீட்டர் பதிவில், “அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்கு வரவேண்டாம். அப்படி வருவது இங்கிருப்பவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும்.

எல்லை தாண்டிய பயங்கராவாதத்தில் இருந்தும் தாக்குதல்களில் இருந்தும் மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் வருவது சரியாக இருக்காது" என்று குறிப்பிட்டிருந்தது.
எனினும், அதனை பெரிதாக பொருட்படுத்தாத திட்டமிட்டபடி இன்று மதியம் அவர்கள் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். ராகுல் தலைமையில் சென்றுள்ள அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், திமுகவின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித்மேமன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். பின்னர், விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

இதுவரை மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீரில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அனுமதிக்கவில்லை. ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முப்டி, ஒமர் அப்துல்லா உட்பட 400 அரசியல் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments