முன்னாள் போராளிக்கு உயிர் அச்சுறுத்தல்

மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர பொலிஸ் சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என  அம்பாறை மாவட்டம்  முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார்.

நேற்று (21) மாலை காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

கடந்த 9ம் திகதி நாங்கள் நித்திரையில் இருந்த போது இரவு 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் சம்மாந்துறை பொலிஸில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறி ஜன்னல் கதவு போன்றவற்றை பலமான முறையில் தட்டினார்கள். ஒருவரை கொல்ல வருபவர்கள் நடந்து கொள்வது போல் நடந்து கொண்ட இந்த இனந்தெரியாத நபர்களின் மிலேச்சத்தனமான செயற்பாட்டின் பிரகாரம் எமது உயிரைப் பாதுகாக்க அன்றைய தினமே உடனடியாக அவசர பொலிஸ் பிரிவினருக்கு நான் தகவல் கொடுத்திருந்தேன்.

எனது விலாசம் எனது தொலைபேசி இலக்கம் எனது முழு பெயர் போன்றவற்றை மேலதிக விவரங்களை என்னிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட அவசர பொலிஸ் பிரிவினர் இரண்டு கிழமைகள் ஆகியும் கூட இது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அச்சத்தின் காரணமாக  தற்போது உறவினர்களின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கி இருக்க  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏனெனில் தொடர்ந்து எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவருகின்ற சூழ்நிலையால் நாங்கள் இடத்தை மாற்றி மாற்றி தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். எங்கள் வீட்டில்  பொலிசார் என தெரிவிப்பவர்கள் தொடர்ந்து  வருகை தந்து விசாரணை செய்வதால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றோம். 

எனினும்  சம்பவம் தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த தகவலை தெரிவிப்பதற்காக கல்முனை மனித உரிமை ஆணையத்துக்கு சென்று விவரங்களை கூறினோம். அவ்வேளை பொலிஸாரிடம் சென்று புகார் அளித்த முறைப்பாடு பிரதியினை பெற்று காட்டுமாறும் அதன் பின்னரே மனித உரிமை ஆணையத்தில் புகார் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால்  அவ்வேளையில்தான் அவசர பொலிஸ் பிரிவினர் நான் கொடுத்த புகாரினை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு தெரிவிக்கவில்லை என எனக்கு அறியக்கிடைத்தது.

No comments