சாதி ஒழியும்வரை நாம் அடிமையாகத்தான் இருப்போம்- சீமான் வேதனை

சாதி ஒழியும்வரை நாம் அடிமையாகத்தான் இருப்போம் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பேசியுள்ளார்.

‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் தயாரித்து இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய புகழ், மற்றும் சீமான் நடித்துள்ள ‘முந்திரிக் காடு.’ திரைப்படஇசைவெளியீட்டு விழாவிலே கலந்துகொண்டு பேசிய சீமான் இவ்வாறுகூறியுள்ளார்

மேலும் பேசும்போது, “என் தம்பி மு.களஞ்சியத்தின் கனவுப் படைப்பாக இந்த ‘முந்திரிக்காடு’ படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன். பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கிறது.
இமையம் அவர்களின் எழுத்தை நம்பித்தான் தம்பி களஞ்சியம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கிறார் களஞ்சியம்.  புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த தோழர் சி.மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன்.
இங்கு ‘எழுச்சி’, ‘புரட்சி’ என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு ‘எழுச்சி நாயகன்’ என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன்.. காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த ‘முந்திரிக்காடு’ படம் ‘பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு விழாவில் ஒரு நடிகர் ‘திஸ் பிலிம்ல சாங்க்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு’ என்கிறார். இந்தச் சனியன்களை வைத்து என்னடா பண்றது..? நாக்குலகூட தமிழ் சரியா வரலியே.. நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க..?

 புறநானூறு, நான்கு சாதிகள் தவிர வேறில்லை என்று சொல்கிறது. எந்தச் சொல் உன்னை இழிச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லைத்தான் உனது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். பெயரையே மொழியாக வைத்துக் கொண்ட சமூகம் நம் சமூகம்.
 சாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சதி, மத உட்பகைதான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக் கொள்கிறது. ‘சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். அவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகப் போய்விடும்…’ என்றார் முத்துராமலிங்கத் தேவர்.
சாதிய விடுதலை, மத விடுதலை, பொருளாதார விடுதலை எதுவுமே இன்னும் இந்தியா பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும்தான் பெற்றுள்ளோம். மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்த வெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.
கோயில்களில் இருக்கும் சாதி, திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள்தான். நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்றுதான் போராடுகிறோம்.
அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் இந்த ‘முந்திரிக்காடு’ திரைப்படம்  பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்…” என்று கூறினார்.

No comments