நீதி காற்றில் கரைந்து போகும்போது, தனி நபர் கோபத்தின் எழுச்சியாய் சத்யராஜ்;

நடிகர் சத்யராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படம் பற்றிய செய்திகள் பெரிதாக பரவியிருக்கும் காரணத்தாலேயே, அது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தை ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்துள்ளார்.
‘யாமிருக்க பயமேன்’ மற்றும் ‘காட்டேரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.என்.பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். பிரபல படத் தொகுப்பாளர் ரூபனின் உதவியாளர் சரத் இந்தப் படத்தில் படத் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். ‘குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். அறிமுக இயக்குநரான தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ரெட் மான்ஸ்ட்ரோ 8K கேமரா இப்படத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ் படத்தில் சில அதிரடி காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும், சத்யராஜின் மனதைக் கவரும் நடிப்பு பதிவாகியிருப்பது குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதோடு, படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
இது குறித்து படத்தின் இயக்குநர் தீரன் கூறும்போது, “ஆக்‌ஷன் திரில்லரான இப்படம், கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, நீதி காற்றில் கரைந்து போகும்போது, அதன் மூலம் தீயவர்களின் ஆதிக்கம் அதிகமாகும்போது, தனி நபர்களுக்கு எழும் கோபத்தின் எழுச்சியைப் பற்றிப் பேசுகிறது.

சத்யராஜ் சார் படத்தில்  நடித்திருக்கும்விதம் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் பார்ப்பவர்களுக்கு இது ஒரு தொடர்ச்சியான அறிக்கையாக தோன்றும் என்று நினைக்கிறேன். இது முற்றிலும் உண்மை.
ஏனென்றால் அவர் தனது மாயாஜால எனர்ஜியால் எங்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்தியுள்ளார். தினேஷ் சுப்பராயன் தனது பாணியில் சில கடினமான சண்டைக் காட்சிகளை வடிவமைத்தார்.

சத்யராஜ் சாரால் அதை நிறைவேற்ற முடியுமா என்று எங்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும்கூட, அவர் சண்டைக் காட்சிகளில் தனது அதிரடியால் எங்கள் நம்பிக்கையின்மையை அப்பட்டமாக அடித்து நொறுக்கினார். பாதகமான காலநிலை நம்மை விரைவிலேயே சோர்வுக்கு உள்ளாக்கி விடும், ஆனால் அவர் ஒரு இடைவிடாத ஆற்றலை காண்பித்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இது வெறுமனே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல. நம் உடலை கட்டுக்கோப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க நாமும் சில உடற் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறது..” என்றார்.

நன்றி - தமிழ்சினி பேச்சு

No comments