இலங்கை படைகளிற்கு வெள்ளையடிக்கும் தமிழரசு!


இலங்கைப்படைகளிற்கு வெள்ளையடிக்கும் தமிழரசு பிரமுகர் சுகிர்தனின் தலைமையில் மீண்டும் இராணுவ அதிகாரிகள் பங்கெடுக்கும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மக்களது விருப்பிற்கு மாறாக மரம்நடுகை, விளையாட்டுபோட்டி பரிசில் வழங்கல், டெங்கு ஒழிப்பு என இராணுவத்தோடு நெருங்கி செயற்படும்; கருகம்பனை கழகம் எனும் அமைப்பே மீண்டும் படையினரை வரவேற்றிருக்கின்றது.

2017ம் ஆண்டு மாவை.சேனாதிராசா மற்றும் படை அதிகாரிகள் சகிதம் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடமொன்றை திறந்து வைக்க மீண்டும் 513ம் படைப்பிரிவின் இராணுவத்தளபதியை அவ்வமைப்பு அழைத்துள்ளது.

'இராணுவத்தை வெளியேற்றாவிடின் போராட்டம் வெடிக்கும்' என கொழும்பு அரசுக்கே காலக்கேடு விடுத்த மாவை சேனாதிராசா, 513வது இராணுவ தளபதியுடன் திறப்பு விழாவில் பங்கெடுக்கவுள்ளார்.

ஏற்கனவே வடக்கில் உள்ள இராணுவத்தினர் மனிநேயம் மிக்கவர்கள் என நற்சான்றிதழ் வழங்கிய வலி.வடக்கு பிரதேசசபை தலைவரும் மாவையின் தனிப்பட்ட செயலாளருமான சுகிர்தனின் ஆலோசனையிலேயே அழைப்பினை படையினருக்கும் விடுத்ததாக தெரியவருகின்றது.

நேற்று தனது அலுவலகத்திற்கு ஊடகவியலாளர் சிலரை அழைத்த சுகிர்தன் மீண்டும் படையினரால் அமைக்கப்படும் விகாரைக்கெதிராக சுமந்திரன் சகிதம் சட்டரீதியாகப்போராடப்போவதாக அறிவித்திருந்தார்.

ஒருபுறம் இவ்வாறு ஊடகங்கள் வழி மக்களிற்கு படை எதிர்ப்பாளரா காண்பிக்கும் இத்தகைய தரப்புக்கள் இன்னொரு புறம் பின்கதவால் பேரம் பேசிக்கொள்வது தெரிந்ததே.

No comments