காணாமல் ஆக்கப்பட்ட தாயின் வலிமிகும் துயரம்

கருவறையில் செதுக்கினேன் உருவது முழுமை பெற விரதமிருந்தேன்
இருவரின் சாயலில் நிழலாய் பிறந்திட்ட உயிரணுவே!

பரம்பரை காப்பாய் என்றே பல கனவுகள் கண்டேன்
வரும் பகை தகர்ப்பாய் என தாய்ப்பால் தினமும் ஊட்டினேன்

வளர்பிறையென நீயும் புது இன்பந் தந்து வாழ்வை சிறப்பித்தாய்
துயர் சூழும் என்று நானும் துளி கூட  எண்ணியதில்லை

பள்ளி செல்லவே  பல முறை என் சேலையில் ஒளிந்து மறைவாய்
சொல்லித் தந்த தர்மத்தை உந்தன் வாழ்நாளில் கடைப்பிடித்தாய்

கள்ளங்கபடமற்ற சேயே உந்தன் கனிமொழி கேட்டே விடியும் என் விடியல்
தெள்ளத்தெளிவாய் எதையும் கணித்தறிவாய்
எந்தன் பார்வையிலேயே வலம்வருவாய்

சொல்லாத துயரங்கள் எமை துரத்த தூரதேசம் பயணமானோம்
பொல்லாத அரசின் கெடுபிடியில் சொல்லாமல் போராட புறப்பட்டாய்

தேடாத இடமில்லை ஒருநாள் தமிழர் சேனையோடு நீயும் வந்தாய்
காணாத என் விழியில் ஆனந்த கண்ணீராய் நீயும் நிறைந்தாய்

போராட சென்ற நீயோ ஒருபோதும் போர்த்தர்மம் மீறியதில்லை
பாராளும் தலைவனோடு பெரும் பாசங் கொண்டு சமராடி நின்றாய்

என்செய்வேன் சொல்வாயோ என்முன்னே சரணாகதி அடைந்தாய்
கண்முன்னே கடத்தி போகிறானுகள் என உள்மனம் தவித்ததை என்செய்வேன்

பத்தாண்டுகளாய் பல பல போராட்டம் நடத்தினோம் பலனேதும் கிட்டலியே
பரதேசி போல தெருவெல்லாம் அலைந்தோம் சிறு இன்பமும் எம்மை தொடலியே

வேண்டாத சாமியில்ல பார்க்காத உயர் அதிகாரிகள் இல்ல
கேட்காத ஆளில்லை யாரும் எமக்காக வாதிட மனித பிறவிகளேனும் இல்ல

இளமை மெல்ல கரைந்திடுச்சு முதுமையில் உடலில் படர்ந்திடுச்சு
இனிமை ஏதும் ஒட்டலியே எந்தன் உசிரு போகும் முன்னே வந்திடுவாயோ!

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அமைத்தும் தேடினோமே
கண்காணாத தேசத்திலா சிறையிருக்கிறாய் எதை சொல்லி நானும் ஆற்றிட

சம்பந்தரின் காலில் வீழ்ந்து உந்தன் விடுதலையை வேண்டினேனே
சம்பந்தனோ சம்பந்தமில்லாமல் கதைத்து எம்மை ஏமாற்றிவிட்டார்

கபட நரி ரணிலின் காலிலும் வீழ்ந்தே கதறினோம் அது
நரித்தனமாய் நழுவி நல்லாட்சி நடத்த எமை பலிக்கடவாக்கியது

புரியாத மொழி இருந்தும் எங்கள் வலியின் மொழி புரிமென்றே
டேவிட் கரோனின் காலிலும் வீழ்ந்தே கமறினோம் அவனோ பதவியை விட்டோடினார்

உடலும் ஊசலாடுதே உசிரும் வெளியேற துடிக்கிறதே
மனசும் பேதலித்து கிடக்கிறதே மகனே உந்தன் முகம் பார்க்க முடியலையே

எத்தனை தேர்தல் வந்தன அவை யாவுமே எமை ஏமாற்றி ரசித்தன
பலரது வாக்குறுதிகள் காற்றிலே கரைந்தே நிர்க்கதியை தந்தன

பிராணவாயு அடங்கும் முன்னே உன்னை பார்ப்பேனா தெரியலையே
பிராணனை பிடித்து வைத்திருக்கிறேன் நல்ல சேதி வந்திடாத என்றே

தமிழினத்து வந்த வேதனையை போக்கிட யாருமில்லையை இந்த
தரங்கெட்ட சர்வதேச அமைப்பெல்லாம் எமை சாகடிக்க வந்தனவே ஐயா!

அங்கிருக்கிறாய் இங்கிருக்கிறாய் என்றே நானும் அலைந்தேன்
எங்கும் தேடியும் கிடைக்கலியே என்றே காலும் களைத்து போனதடா!

உனைத்தேடியே எந்தன் ஆயுளும் நித்தம் தேய்ந்ததே!
உன்னை கண்டிட விரதம் இருந்தும் பார்த்தேன் பயனேதுமில்லையே

எனை மன்னித்துவிடு தங்கமே! உனை காத்திட முடியாத பாவியானேன்
என்ன சொல்லி ஆற்றிடுவேன் என் மனசை
கண்மூடினாலும் தீராத வலியிதுவே

மகனே கேள்!  இந்த கட்டை இந்த மண்ணை விட்டு போகலாம் - ஆனால்
எந்தன் ஆவி உன்னை காண இந்த காற்றில் கலந்தே இருக்கும்

- ரேணுகாசன் ஞானசேகரம் -

No comments