பேச்சுகளில் வெற்றியுமில்லை:தோல்வியுமில்லை-விக்கினேஸ்வரன்?


தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்தகருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்கவேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்த்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து வெற்றிகரமாக “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும்,அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்திவருவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இன்றுஏராளமானதமிழ்,முஸ்லிம்,சிங்களகட்சிகள் செயற்பட்டுவருகின்றன. எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றதெனவும் இன்று அவர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்.

  

மறுபுறத்தில்,தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன  அழிப்பு நடவடிக்கைகளுக்குச்சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது. இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்திவந்தேன்.  அதேசமயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கட்சிரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என்றும் கூறியிருந்ததை முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இவ்வகையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேச்சு முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ள அவர் இந்தமுயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால்அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். 


தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேநான் எதிர்பார்க்கும் இந்தகொள்கைரீதியானஒத்திசைவுஅதிகம் இருந்துவந்தாலும்கடந்தகாலங்களில்“எழுகதமிழ்”கூட்டங்களைநடத்தியமைஅரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக்கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று விரும்பினேன். 
இந்த அடிப்படையில் தான் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். ஆனால்,தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் EPRLFக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள்,  இந்தகட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமதுதமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக்கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது. இதுமுற்றிலும் தவறு. எனதுஅரசியலில் இதைசெய், இதைசெய்யாதே என்று இந்தியா இன்று வரை எந்தசந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எதுசரி என்று நினைப்பதையே நான் இன்று வரை செய்துவந்துளேன். இனியும் செய்வேன். ஆனால்,தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒருதீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குஅவசியம் என்றும் அதனை இந்தியாசெய்யும் என்றும் நான் நம்புகின்றேன். 
என்னைப்பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ,எனதுபிம்பமோ எனக்கு முக்கியமானவைஅல்ல.  அதனால்த்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத்தான் விரும்புகின்றார்கள் என்பதைவலியுறுத்தியும் சிலவாரங்களுக்குமுன்னர் தம்பிகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பலவிடயங்களைநான் குறிப்பிட்டிருந்தேன். முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒருவாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத்தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்படவேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன். தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச்சந்திப்பதற்கு நேரம்ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். 
இந்தியா எம்மைஅவர்களுடன் சேரவேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன்வரவேண்டும்? ஆனால் இன்று வரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாகபதில் அளிக்கவில்லை. ஆனால்,காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய ஒருபேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக்குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன். பின்னர் கொழும்புதமிழ் சங்கத்தில்அண்மையில் நடந்தஒருநிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்”மட்டுமேதமிழ்த் தேசியமக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக்கற்று  எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்லவேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப்பேசி பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன். 
இந்தநிலையில் தான்,பரந்த கூட்டணிஒன்றைஅமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டு வருவதற்குத்தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமானபேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனைநான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப்பேசித்தீர்க்கும் ஒரு முயற்சியாகதமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒருசந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார். இந்தசந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது.எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும்  பிரச்சினைகளைத்தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே  இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும்  எமக்கு இடையே இருக்கவில்லை. ஆனால்,EPRLF கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்த போது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.  
இந்தவிடயத்தில் நான் யாரையும் குறை கூறவிரும்பவில்லை. நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால்,தவறானஅணுகு முறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. 
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்று செயற்பட விரும்புபவர்களையும் இணைத்துசெயற்படுவதே எமதுநோக்கம். இந்த முயற்சியில்  கட்சிநலன்களைமுன்னிறுத்திஎந்தமுன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவலநிலையைக்கவனத்தில் கொண்டுதான் கட்சிகள் செயற்படவேண்டும். அதேவேளை,எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமதுமூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பரநம்பிக்கை,அதே சமயம் இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்படவேண்டும். இந்தமுயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால்அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments