வித்தியா கொலை வழக்கு - தலைமறைவான பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209 ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 30 பேரை வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். முதலாவது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி துஷித் ஜோன்சன் முன்னிலையானார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இரண்டாவது எதிரி எங்கே? அவர் தொடர்பில் தகவல் உண்டா? என்று வழக்குத் தொடுனரிடம் மன்று கேள்வியெழுப்பியது.

“இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

அத்துடன், இந்த வழக்கை முன்னெடுக்க சட்ட மா அதிபரால் சிறப்பு அரச சட்டவாதி சட்ட மா அதிபரால் நியமிக்கப்படுவார் எனவும் அரச சட்டவாதி மன்றுக்கு அறிவித்தார்.

இரண்டாவது எதிரி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கு விசாரணையை செப்ரெம்பர் 27 ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments