அவசரகால சட்ட நிபந்தனைகள் மற்றும் குற்றவியல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பொதுபலசேனாவினால் கண்டியில் நடத்த திட்டமிட்டிருக்கும் மாநாட்டுக்கு நீதிமன்ற தடை உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு பதில் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. 
இதுதொடர்பாக அவ்வமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தெரிவிக்கையில்,
பொதுபலசேனா அமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி நகரில் மாநாடொன்றை நடத்த திட்மிட்டிருக்கின்றது. இந்த மாநாட்டுக்கு ஒரு இலட்சம் பெளத்தர்களும் 10 ஆயிரம் தேரர்களும் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இம்மாநாட்டின் நோக்கமாக இருப்பது, முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் மற்றும் மத அடிப்படையிலான விடயங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் பொதுபலசேனா அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட இவ்வாறான கூட்டங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய கலவரங்கள் ஏற்பட்ட வரலாறு இருக்கின்றது.
அளுத்கம, திகன போன்ற சம்பவங்களின்போது முஸ்லிம்களின் சொத்துக்கள் பாரியளவில் அழிக்கப்பட்டன. இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களின் கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.