யாழ் மாநகரசபை முன் முற்றுகைப் பேராட்டம்

யாழ்.மாநகர எல்லைக்குள் பொருத்தப்படும் கம்பங்களில் 5G அலைவரிசை பொருத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து மாநகரசபை முதல்வர் கூறுய கருத்துக்களை கண்டித்தும், 5G அலைவரிசை வேண்டாம் என கூறியும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

மேற்படி 5G  அலைவரிசை தொடர்பாக  பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச நிலை குறித்து யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கடந்த 9ம் திகதியும், கடந்த 13ம் திகதியும் கூடி ஆராய்ந்துள்ளன. இதனடிப்படையில் இந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளன.

மேற்படி மக்கள் இயக்கம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து கூறும்போதே மேற்படி போராட்டம் தொடர்பான தகவலை கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்,

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கம்பங்கள் தற்போது வடமாகாணம் முழுவதும் பொருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த கம்பங்களில் 5G  அலைவரிசை பொருத்தப்படவுள்ளதாக மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த கம்பங்களில் 5G  அலைவரிசை பொருத்தப்படாது என்பதற்கு அப்பால் அது நாட்டப்படும் விதம் மற்றும், அதனை நாட்டுவதற்கு மக்களிடம் கூறப்படும் பொய்கள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.

 குறிப்பாக கம்பங்கள் அமைக்கப்படும் இடங்களில் எதற்காக குழிகள் வெட்டப்படுகின்றன என மக்கள் கேட்டபோது அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் தேவைகளை கூறி மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.அப்படியானால் குழி வெட்டுபவர்களை யாரோ வழிநடத்துகிறார்கள் என்றே அர்த்தம்.

மேலும் யாழ்.செட்டித்தெரு பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் கம்பம் அமைக்கப்பட்டது. உடனே காணி உரிமையாளர் தட்டிக்கேட்ட நிலையில் அவருடன் டீல் பேசப்பட்டிருக்கின்றது. அதேபோல் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் தனியார் ஒருவருடைய காணியில் கம்பம் அமைக்கப்பட்டபோது உடனேயே அந்த இடத்திற்கு பொலிஸார் வந்தனர்.

அதன்பின்னர் அந்த கம்பம் தமக்கு வேண்டாம் என மக்கள் சார்பில்  9 பஏர் இணைந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். அதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு மக்களை வற்புறுத்தி, அச்சுறுத்தி முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டிருக்கின்றது.

மேலும் சாதாரணமாக பொது பயன்பாட்டு வீதிகளில் இவ்வாறு கம்கங்கள் அமைக்கப்படும்போது அவை தொடர்பாக பல திணைக்களங்களிடம் அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் இவர்களிடம் எந்தவொரு அனுமதியும் கிடையாது. அப்படி இருக்கையில் குறித்த திணைக்களங்கள் வாய் மூடி இருப்பது ஏன்?

அதற்கு காரணம் இந்த கம்பங்கள் அமைக்கப்படுவதற்கு பின்னால் பல பண முதலைகளும், பல டீல்களும் உள்ளது. இது ஒருபுறமிருக்க 2018ம் ஆண்டு 214 விஞ்ஞானிகள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இந்த 5G  தொழிநுட்பம் ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டியிருக்குன்றனர்.

இந் நிலையில், வைத்தியர் என்று கூறும் சிலர் தான்தோன்றிதனமாக அறிக்கை விடுவதை முதலில் நிறுத்தவேண்டும். அந்தவகையில் இந்த கம்பங்களுக்கு பின்னால் பல சூழ்ச்சிகளும், பண முதலைகளும், டீல்களும் உள்ளன. ஆகவே இதனை கண்டித்து எதுர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.மாநகரசபைக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளோம் என்றனர். 

No comments