ராஜினாமா கடிதத்தை காணோமாம்: தேடுகின்றார் மைத்திரி?




முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்கவில்லையெனவும் தெரியவருகின்றது.
நேற்று (05) இரவு வரையில் எந்தவொரு அமைச்சரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது வாகனங்களை ஒப்படைக்கவில்லையெனவும், தமது தனிப்பட்ட செயலணியை பதவி நீக்கவில்லையென, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டபோது அவர்களும் இதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்குமாறு மூன்று மகா சங்கத்தினதும் மகாநாயக்கர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள யாராவது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பதாயின் தான் சார்ந்த நியாயங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கும், அது தொடர்பானவர்களுக்கும் முன்வைத்து தீர்த்துக் கொள்வதற்கு முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் மகாநாயக்கர்கள் அவ்வேண்டுகோளில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் மகாசங்கத்தினர் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக மற்றும் கலாசார துறைகளின் முன்னேற்றம் காண்பது குறித்து 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் நேற்று (05) விசேட அறிவிப்பொன்று செய்யப்பட்டது.

அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் தலைமையில், மூன்று பிரதான பீடங்களினதும் உயர்மட்ட கலந்துரையாடல் கண்டி அஸ்கிரி மகா விகாரையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த 15 அம்ச அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து விரைவில் வெளியிடவுள்ளதாகவும் மூன்று பீடங்களும் ஊடகங்களிடம் அறிவித்திருந்தன.

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளை சமாதானத்துக்கு கொண்டுவருது தொடர்பில் மூன்று பிரதான பீடங்களின் மகாநாயக்கர்களும் இணைந்து நேற்று கண்டியில் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னரே முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறந்த நிருவாகம் ஒன்றுக்காக சகல தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்படுவது எவ்வாறு என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சகல தரப்பினரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்து, சமாதானமான ஒரு நாடாக உலகிற்கு எடுத்துக்காட்டி தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மல்வது பீட போசகர் நியங்கொட விஜிதசிறி தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அமைச்சு கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பிலேயே ராஜினாமா கடிதங்களை கையளிக்காதுள்ளனராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments