ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர் முறைப்பாடு!

முல்லைத்தீவு - நட்டாங்கண்டலில் இருந்து துணுக்காய், அக்கராயன், பூநகரி வழியாக கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவைக்கு யாழ்ப்பாணத்திலும் துணுக்காயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பாக, பஸ் உரிமையாளர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்,  முறைப்பாடு செய்துள்ளார்.
திங்கட்கிழமை (24), மேற்படி வழித்தடத்தில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் பஸ்ஸினை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.
பஸ் சேவையை தொடங்க முதல் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய தனியார் பஸ் சங்கங்களின் அனுமதிகளைப் பெற்றிருந்தோம். ஆனால், பஸ் சேவை ஆரம்பித்து இரண்டாம் நாளில் யாழ்ப்பாணத்தில் பஸ் தரித்து நிற்பதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.
எங்களிடம் சகல அனுமதிகளும் உள்ளன. ஆனால் தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இருந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் வழங்கப்பட்ட அனுமதியை மீளக் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் பஸ் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் ஏற்படுத்தப்படுகின்ற தடைகளுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரை தொடர்பு கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், பஸ் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.
இதன்போது, வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரால், வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அதிகார சபைக்கு இல்லை.
இன்றைய தினம் (28) கூட்டமொன்று உள்ளது. அப்போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

No comments