நீராவியடிப்பிள்ளையாருக்கு பொங்கல்?


முல்லைதீவின் செம்மலை நீராவியடி ஏற்றம் பிள்ளையார் ஆலயத்தில் இந்துக்களுடைய உரித்தை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழாவை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மலை - நீராவியடி ஏற்ற பிள்ளையார் ஆலயம்; மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயம். பின்னர் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அந்த பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், அங்கு சிறிய புத்தர் சிலையையும் வைத்தனர். பின்னர் இராணுவத்தினர் உதவியுடன் அங்கு பௌத்த பிக்கு ஒருவரும் வந்து தங்கிய நிலையில், சிறிது சிறிதாக பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட ஆரம்பித்ததென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

பிள்ளையார் ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக தமது வழிபாடுகளை நடத்தலாம் என நீதிமன்றம் கட்டளை வழங்கியது. 

ஆனாலும் அங்குள்ள பௌத்த பிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சிங்கள மக்களை அழைத்துவந்து தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும்,  அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொள்வதுமாக பல பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

எங்களுடைய பூர்வீகமான மண்ணில், எங்களுடைய வழிபாட்டு தலத்தில் எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழா ஒன்றை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து ஒழுங்கமைத்திருப்பதாகவும் ரவிகரன் தெரிவித்தார். 

No comments