கிடப்பிற்கு போகின்றது மன்னார் புதைகுழி?


சர்ச்சைகளை தோற்றுவித்த மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே மனித எச்சங்கள் அல்லாத ஏனைய சான்றுப்பொருட்கள் காவல்துறையினரின் உதவியுடன் அகழ்வில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக பேராசிரியரிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட தடயப்பொருட்கள் எடுக்கப்பட்டு, அவற்றில் இருந்து மனித எச்சங்கள் தவிர்ந்த ஏனைய தடயப் பொருட்கள் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டுள்ளன.

தடயப்பொருட்களை பிரிக்கும் நடவடிக்கைக்கு சட்ட உதவி தேவை என இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்தார். அதற்கமைய, இந்த நடவடிக்கையின் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

No comments