இறந்த மனைவியின் உடலோடு போராடி கோரிக்கையை வென்ற மருத்துவர் - சண்முகப்பிரியன்

பொதுமைத் தமிழ்த்தேசத்தின் இயற்கையின் மீதான அளவுகடந்த நேசிப்பை உரியவர் தோழர் மருத்துவர் ரமேஷ். வீட்டுக்குள் அரசியல் பேசாத பலரை போல அல்ல எல்லாம் அரசியல் தான் - அரசியலுக்கான ஆதாரம் என்ற மார்க்சிய அரசியலை உள்வாக்கியவர்...

நம்மை போன்ற 90 களின் குழந்தைகளின் வயதும் அவரது இயற்கை சூழலியல் பாதுகாப்பிற்கான போராட்ட அனுபவமும் ஒன்றே...

கல்பாக்கம் கூடங்குளம் அணு உலை - ஐட்ரோகார்பன் - மீத்தேன் - நியூட்ரினோ - எட்டுவழி சாலை - மரண தண்டனை எதிர்ப்பு - கார்ப்பரேட்களின் தடுப்பூசி மரண வியாபாரம் என தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விடப்படும் அத்துனை தீமை திட்டங்களுக்கும் எதிராக அறிவாயுதம் ஏந்தும் முன்வரிசை வீரர்.

உண்மையில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஆழமாக செயலாற்றி வருபவர். அதற்கு அவரது இணையரின் பங்களிப்பு என்பது இமயமலை ஒத்தது.

அரசியல் என்ற சொல்லின் முழுமையான பொருளை கற்றவர் எங்களை போன்ற இளையத்தலைமுறைக்கு கற்பித்தும் வருபவர்.

நேற்றைய நாளையும் தன் இணையரின் இறந்த உடலோடு மண்ணுக்கான  சமூக பங்களிப்போடு செய்திருக்கிறார்.

தன்னுடைய மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது  ஆனைகட்டி மலைப்பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்புக்கும் இடையே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் அருகில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களால் பலமாக மோதி மருத்துவர் ரமேஷ் அவர்களின் இணையர் சோபனா அவர்கள் மரணமடைந்தார்.
மகள் கடுமையான விபத்தின் காரணமாக கால் எலுப்புகள்  கை,  முகம் என கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த மனிதன் சராசரி நபர்களை போல அழுது புலம்பி செய்வதறியாது நிற்காமல்...

மருத்துவரோ மகளை சமூகம் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டு விட்டு...

மனைவியியின் உடலோடு அப்பகுதி மக்களோடு டாஸ்மாக் கடையை அகற்ற சாலையில் தன்னந்தனியாக இரவு வரை போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடை நீக்கப்படும் என்ற உறுதிக்கு பின்பே மனைவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

காலை 3. 30 மணிக்கு தன் மகளை மருத்துவமனையில் காண கதறலோடு பயணப்படுகிறார்.

எந்த ஒரு போராட்டமென்றாலும் கணவனோடு கை கோர்த்த அவரது இணையர். புரட்சிகர அரசியலை கற்று அதை கைக்கொண்ட போராட்ட வாழ்வை வாழ்ந்த அந்த தோழர் சோபனா அவர்கள் இன்று அவரது உடலையே சமூகத்திற்கான ஆயுதமாக மாற்றினார்.

சமூகத்தின் மீதான அளவு கடந்த உங்கள் அன்பை இந்த சமூகம் மறவாது...

நாம் இங்கே நிறைவாக வாழ இவர்களை போன்றவர்கள் தான் காரணமென தெரியாமல் தமிழ்நாடு தன் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

இவர்களோ அதை பற்றி சிறிதும் கவலைக்கொள்ளாது மீண்டும் மக்களுக்கான போராட்டத்தில் இழந்தவையை மறந்து இன்னும் இழக்க களம் காணுகின்றனர்.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...
 



No comments