பதவி விலகினார் புலனாய்வுப் பணிப்பாளர்


தேசிய புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகியுள்ளார் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டெகொட இன்று அறிவித்துள்ளார்.

ஆனால், சிசிர மெண்டிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான மாதாந்தக் கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார் என அறியமுடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வில் சிசிர மெண்டிஸ் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதி நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போது, “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரழைக்கப்பட்டு அரச புலனாய்வுத் தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளாவர். எனவே, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவரையும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க நான் அனுப்பப் போவதில்லை. அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments