ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா மீது ஆயுதத் தடை விதிக்கப்படும் - ஜோன் மக்டொனல்!

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சிறீலங்கா அரசுக்கான ஆயுத விற்பனைகள் அனைத்தும் தடை செய்யப்படும் என்று தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சருமான ஜோன் மக்டொன்ல் (John McDonnell) தெரிவித்துள்ளார்.

இன்று 15.05.2019 புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Siobhain McDonagh) அவர்களின் அனுசரணையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் சிறீலங்கா ஆயுதப் படைகளுக்குப் பிரித்தானியாவால் வழங்கப்படும் பயிற்சிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி (Emily Thornberry), நிழல் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பிறீற் ஜில் (Preet Gill), நிழல் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் லிஸ் மக்இனெஸ் (Liz McInnes) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விரேந்திர சர்மா (Virendra Sharma), ஸ்டீபன் ரிம்ஸ் (Stephen Timms), லூக் பொலார்ட் (Luke Pollard), ஸ்ரெலா கிறீசி (Stella Creasy), கரன் லீ (Karen Lee), வெஸ் ஸ்ரிறீற்ரிங்க் (Wes Streeting), கரத் தொமஸ் (Gareth Thomas), சாரா சம்பியன் (Sarah Champion) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments