பாடசாலை சென்ற மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி


திம்புள்ளை, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை திடீரெனச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொதுச் சுகாதாரப் பரிசோதக அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இக்கல்லூரியில் தௌ்ளுப் பூச்சிகள் இம்மாணவர்களைத் தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கு அவ்வாறான நிலை காணப்படவில்லை எனக் கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை.

இவ்வாறிருக்க இவ்வகுப்பறையில் மாத்திரம் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்குத் திடீரென இன்று காலை கைகள் மற்றும் முதுகுப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு கொப்பழங்கள் உருவாகியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

No comments