பயங்கரவாதம் தென்னிலங்கையிலேயே உருப்பெற்றது

இலங்கையில் ‘பயங்கரவாதம்’ தெற்கிலேயே முதன்முதலில் ஆரம்பித்தது என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முன்னெடுப்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘தேசிய வழி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையில் பெருந்தொகையான பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக நிறுவனப் பிரதிநிதிகள், கலைஞர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் பண்டாரநாயக்காவைப் படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். பின்னர் ஆயுதச் செயற்பாடுகள் பயங்கரவாத இயக்கங்களாக அறியப்பட்டு, சிங்களப் பயங்கரவாதம் என்ற பெயரில் தெற்கில் சொல்லப்பட்டு, பின்னர் தமிழ்ப் பயங்கரவாதம் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் சொல்லப்பட்டு, இன்று ஐ.எஸ்.ஐ.எஸ்.என்ற சர்வதேச தொடர்புடன் இஸ்லாமிய பயங்கரவாதமாக சொல்லப்பட்டு வருகின்றது.

ஆகவே, இன்று பயங்கரவாதம் என்பதற்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகள் இந்நாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் கூடவே இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தநிலையில், “இவை இனி போதும், போதவே போதும்” என்று கூறி புதிய தேசிய ஐக்கிய வழியைத் தேடும் காலம் உதயமாகிவிட்டது என நான் நம்புகின்றேன்.

No comments