புலிகளிடம் தர்மம் இருந்தது!



29 வருடங்கள் இலங்கையில் போா் நடந்தது. இந்தப் போரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள். ஆனால் இப்போது நடந்துள்ள தாக்குதலில் 37 வெளிநாட்டவர்கள் இறந்துள்ளனர். புலிகள் வெளிநாட்டவர்களை வெறுக்கவில்லை. இவர்கள் வெளிநாட்டவர்களை வெறுக்கிறார்கள் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றார்

சமகால நிலமைகள் குறித்து இன்று ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 21ம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சிங்கள மக்கள், தமிழ் மக்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.  அதற்கு பதிலாக முஸ்லிம் மக்கள் தாக்குதல் நடத்துவார்கள் அதன் தொடர்ச்சியாக ஒரு சிவில் யுத்தம் உருவாகும். என்பது தாக்குதல் நடத்தியவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பாக உள்ளது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மேலும் இந்த தாக்குதலின் பின்னரான ஒரு வார காலத்திற்குள் 90 சதவீதம் இலங்கை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

உலகில் தீவிரவாத தாக்குதல்களை எதிா்கொண்ட பல நாடுகளால் எம்மைபோல் மீண்டெழ முடியவில்லை. அங்கெல்லாம் பல ஆண்டுகள் பாதிப்பின் தாக்கம் இருந்தது. அவ்வாறு இலங்கை மீண்டெழுந்தபோதும் முன்னர் இருந்ததைபோல் நிலமை இல்லை.

காரணம் அவசரகால சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்களின் புர்க்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சில விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல. அவை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரானவை.

மேலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நடுத்தர இஸ்லாமிய மக்கள் எப்போதும் ஆதரவு வழங்கியது கிடையாது. அவர்கள் நடுநிலையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் குண்டு வெடிப்பின் பின்னர் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க மத தலைவர்களும் மிக அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டார்கள்.

அதற்காக அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். மேலும் நடைபெற்ற தாக்குதல் சா்வதேச அளவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 3வது மிகப்பரிய தாக்குதலாக அமைந்திருக்கின்றது.

37 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 29 வருடங்கள் இந்த நாட்டில் யுத்தம் நடந்தது. தமிழீழ விடுதலை புலிகள் ஒரு வெளிநாட்டவரைக் கூட கொலை செய்யவில்லை என்றார்.

No comments