தமிழன் கண்ணீரில் ஒருபோதும் தாமரை மலராது! சீறிய சீமான்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் தாமரை மலரவே மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம். தமிழன் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது” என்று பேசினார். அதேபோல கன்னியாகுமரியில் இன்று நாம் தமிழர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், “இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை மடையர்கள் கூட்டம் என கருதி இவர்கள் ஆட்சி செய்வது?

மக்கள் ஏழையாகிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். 72 ஆண்டுகால விடுதலை இந்தியாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய கட்சிகள் காங்கிரஸும், பாரதீய ஜனதாவும். வெட்கமில்லாமல் வங்கியில் 6,000 ரூபாய் போடுவோம் என்கிறார்கள்.

விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் மோடி உங்கள் வீட்டு வாசலில் விவசாயிகள் நிர்வாணமாக நின்றபோது ஏன் அக்கறை காட்டவில்லை? மக்கள் மீது அதீத பற்று வைத்திருக்கும் மோடி கடந்த ஐந்தாண்டு ஆட்சியின்போது நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்நேரத்திற்கு நிறைவேற்றியிருக்கலாமே” என்று பேசினார்.

No comments