தந்தை செல்வாவின் 121 ஆவது பிறந்த தின நிகழ்வு






தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில்

தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்.பல்கலைக்கழக தேவாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் கலாநிதி டானியல் திஜாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவுப் பேருரையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்களான கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில்

தந்தை செல்வாவின் 121வது பிறந்த தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று நேற்றுக் 9 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பில்

தந்தை செல்வநாயகத்தின் 121 பிறந்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சிலையருகில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டு.பிரதேசசபையின் தவிசாளர்கள், மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினர்கள், கட்சி முக்கிஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னாரில்

தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது பிறந்த தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை உறுப்பினர் திருச்செல்வம் சந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.எஸ்.ஜாட்சன், வட. மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments