ஒருவாறாக தப்பித்து வந்தார் கோத்தா?


அமெரிக்காவிலிருந்து ஒருவாறாக தப்பித்து வந்த இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் திரும்பியுள்ளார்.

டுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் கோலாகல வரவேற்பளித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் நாள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு,  எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், சித்திரவதைக்கு உள்ளான தமிழர் ஒருவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் இன்று நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் நீடித்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை கோத்தாபய ராஜபக்ச கொழும்பு திரும்பியிருந்தார்.

இதேவேளை கோத்தாயபய ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் மத நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments