கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்கிறது

தங்களது சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் தமிழினம் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சிறிலங்கா அரசு மேற்கொண்டுவருவது மட்டுமல்லாது போர் நடந்த காலப்பகுதியில் சிறிலங்காவில் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 48 ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இன்றுவரை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினது நெருக்குவாரங்கள் தொடர்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கிறார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்றிருக்கும் அவர் இன்றைய (19.03.2019) 40 ஆவது அமர்வின் 08 விடயமாக நடைபெற்ற பொது விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

ஒரு மக்கள் குழுமமானது, ஐ.நா பட்டயத்தின் பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ச்சித்திட்டம் என்பன அங்கீகரிக்கின்றன.

சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபடமுடியாத தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது.

சிறீலங்கா அரசானது வன்முறையை கையிலெடுத்தபோது அதற்கான எதிர்வினையாக தமிழர் தரப்பும் ஆயுதத்தை கையில் எடுக்கநேர்ந்த்து.

ஆனால் அதேவேளை, தமிழ் விடுதலை அமைப்பினை மட்டுமின்றி, தனது பார்வையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிபவர்கள் என கருதப்படும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் என அனைவரையும் சிறிலங்கா அரசானது தனது இலக்காக கருதியது.

இப்படியானவர்களுள் ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழிலாளர்கள் ஆகியோரே பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

போர் நடந்த காலப்பகுதியில் சிறிலங்காவில் கொல்லப்பட்ட 48 ஊடகவியலாளர்களுள் 41 பேர் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாலர்கள் ஆவார்கள். தமிழர்களல்லாத ஏனைய அந்த 7 ஊடகவியலாளர்களில் ஆகக்குறைந்தது இரு ஊடகவியலாளார்கள், தமிழர்கள் மீதான அரச ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியமைக்காக அரசினால் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

தமிழ்த்தந்தி எனப்படும் ஊடகநிறுவனம் சிறிலங்கா அரசின் ஆகப்பிந்திய இலக்காக அமைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரர் ஒருவர் பற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தமைக்காக அவர்கள் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் அச்சுறுத்தப்படதோடு சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என இந்த சபைக்கு சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ள நிலையிலும் கூட பயங்கரவாதத்தடுப்புப்பிரிவின் இந்த நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால், சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் – என்றார்.

No comments