கோத்தா களமிறங்கினால் ராஜபக்ச குடும்பத்திற்கு சமாதிகட்டுவோம்

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”

– இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் எமது கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி தீர்மானித்துள்ளது என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராகவுள்ளது. எமது வெற்றி உறுதி.

அரசியல் சதியூடாக நாம் ஆட்சி நடத்தவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பின் பிரகாரமே நாம் ஆட்சி நடத்துகின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது மக்கள் எமது கட்சிக்கான ஆணையை வழங்குவார்கள். இதில் நாம் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments