சுமந்தனிற்கு வகுப்பெடுக்கும் சிங்கள தேசம்!


கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் ​​தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், தான் ஓர் இலங்கையர் என்பதை, சுமந்திரன் மறந்துவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.  
இலங்கையில் நீதிப்பொறிமுறை ஒன்று உள்ளதால், அரசமைப்புக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், அரசமைப்புப் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.  
நீதித்துறையில் பேராசிரியராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய நூல்களைக் கற்றே, சுமந்திரன் பரீட்சையில் சித்தியடைந்தார் என்றும், எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.  
இவ்வாறான நிலையில், மீண்டும் கலப்பு நீதிமன்றக் கோரிக்கையை முன்வைப்பது, இந்நாட்டுத் தமிழ் மக்களைப் பலியிடுவதாகவே அமையுமெனவும், அதனால் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாமென, சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

No comments