கடல் பச்சை நிறமாகிவருகிறது !

நீலநிறமாக இருக்கும் கடல்  இன்னும் 80 ஆண்டுகளில் பச்சை நிறமாக மாறிவிடும் என்று  ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர் ,

துருவப் பகுதிகளில் இப்போதே கடல்கள் பச்சை நிறமாக மாறிவருவதாகக் கூறியிருக்கிறார்கள்  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டுமே தற்போது அடர்த்தியான நீலத்தில் கடல் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தப் பெருங்கடல்களின் நீல நிறம் 2100-ம் ஆண்டுக்கு முன்பாக மாறிவிடும் என்று எச்சரித்திருக்கிறது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வு முடிவு.

கடலில் காணப்படும் பைடோபிளாங்டன்-ஆல்கே போன்ற மிதவைத் தாவர நுண்ணுயிர்கள் காரணமாக கடலில் பச்சை நிறம் ஏற்படுகிறது. இந்தத் தாவரங்களைத்தான் கடலில் வாழும் மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. இவை குளோரோபில் என்ற பச்சையத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன. காற்றிலிருக்கும் நைட்ரஜனை கிரகித்து நிலைப்படுத்துகின்றன. பைடோபிளாங்டன்கள் நீலத்தைக் கிரகித்து தங்களுடைய பச்சை வண்ணத்தை ஒளிரச் செய்யும் இடங்களில் எல்லாம் கடல் பசுமையாகக் காட்சி தருகிறது.

பைடோபிளாங்டன்கள் அடர் பச்சையால் அங்கே கரியுமிலவாயுவும் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பருவநிலை மாறுதல்கள் மட்டுமின்றி எல்நினோ கடலடி நீரோட்டங்களும் இந்த நிற மாற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், நீல நிறக் கடல் பச்சை வண்ணக் கடலாக மாறிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

No comments