உயிருக்கு அச்சுறுத்தல் - யாழில் வயோதிபர் நீதிமன்றில் சரண்

யாழ்.இணுவில் பகுதியை சோ்ந்த வயோதிபா் ஒருவா் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகா் ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருக்கின்றாா்.

அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான் தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தனக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் நடமாட முடியாது உள்ளதாகவும் தெரிவித்து யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு நேற்றுச் சென்றுள்ளார்.

அந்த நபர்  நீதிமன்றில் தஞ்சமடைய தனக்கு உதவியளிக்குமாறு கோரியுள்ளார். தன்னால் வெளியில் செல்ல முடியாது எனத் தெரிவித்து வயோதிபர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைய வயோதிபா், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம்  நீதிமன்றில் நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.

உங்களை அச்சுறுத்துபவர்கள் யார் அவர்கள் பற்றிய விவரங்களை வழங்க முடியுமா? என்று அவரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

எனினும் அவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போதும் சந்தேகநபர்கள் பற்றிய விவரத்தைக் கூறவில்லை. அத்துடன் மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தார்.

அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் எவரும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அதனால் அவரை நீதிமன்றப் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பி.போல் குறித்த வயோதிபாின் நபரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

No comments