ஆமி பிள்ளையார் கோவில் கட்டவில்லையாம்?


யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம்  இந்து கோவில்கள் எதனையும் புனரமைக்கவோ அல்லது புதிதாக கட்டவோ இல்லையென , யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் எந்தவொரு வேலை திட்டத்துக்கும் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லையெனவும் அவர் மறுதலித்துள்ளார்.

பலாலியில் உள்ள பிள்ளையார் கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, சீருடை அணிந்த இராணுவத்தினரால், சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில், நிதி சேகரிக்கப்படுவதாக, ஊடகங்களில் அண்மையில் செய்தி வெளியாகியது.

இதற்கு மறுப்புத் தெரிவித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கோவில்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில், இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவிலலையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, தென்னிலங்கை மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி பங்களிப்புகள் மூலமாகவே, யாழ்ப்பாண மாவட்டத்தில், தமது மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இராணுவத்தினரால் கோவில் புனரமைப்புக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிதி சேகரிக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்தி பொய்யெனவும்  மாவட்ட தளபதி என்கிற வகையில், தாம் அறிந்த வரையில், நிச்சயமாக இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அந்த மாதிரியான நிதி சேகரிப்புக்கு, தாம் உத்தரவிடவில்லையெனத் தெரிவித்துள்ள அவர், எது எப்படி இருந்தாலும் இராணுவத்தினரின் பெயரைப் பயன்படுத்தி, எவரேனும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்ற பட்சத்தில், உடனடியாக யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தலைமையகத்துக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

No comments