முந்நூறினை தாண்டியது மன்னார்?


மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு  அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (16) 130 ஆவது நாளாக இடம்பெற்றிருந்தது.

அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள்; முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் புளோரிடாவுக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றது. ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும். அதுவரை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments