சர்வதேச நீதிமன்ற பொறிமுறைக்கு ஜேவிபி எதிர்ப்பாம்?
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி, அது தொடர்பில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை உருவாக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
வடக்கில் மாத்திரம் அல்லாமல் தெற்கிலும் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரிகளுக்கான சிறப்புரிமை சட்டத்தின் சரத்துக்கள் தொடர்பான விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது நீதிமன்றம் செயற்பட்ட விதத்தை மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் அமர்வில் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி தெளிவுபடுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச நீதிப் பொறிமுறையில் இருந்து நீக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை தேடுமாறும் வெளிவிவகார அமைச்சரிடம் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மார்ச் மாதம் ஜெனீவா அமர்வு இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்காவின் மனித உரிமைகளை பாதுகாப்பது ஸ்ரீலங்காவின் செயற்பாடு மாத்திரமல்ல. உலகளாவிய ரீதியிலுள்ள கௌரமிக்க முற்போக்கான நிறுவனங்களுக்கு கண்டறிவதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் உரிமை உள்ளது. அனைத்து நாட்டிலும் உள்ள மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் நாமும் கேள்வி எழுப்புகின்றோம் தானே. எனினும் எமது நாட்டின் இறையாண்மையை அத்துமீறி தலையீடு செய்வதையே நாம் எதிர்க்கின்றோம்.
எமது நாட்டின் மக்கள், அவர்களை வெள்ளை வானை கொண்டுவந்து கடத்துவோம். அல்லது வேறு வகையில் கடத்துவோம் என கூற முடியாது. எனினும் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதற்கு முன்னர் தெற்கில் இடம்பெற்ற சிவில் யுத்தம் ஆகியவற்றில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தேவை என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. விசேடமாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். அண்மையில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியின் போது ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம் செயற்பட்ட விதம், முதுகெலும்புள்ள அந்த முறையை வைத்து ஸ்ரீலங்காவிற்கு ஏற்பட்ட பிரச்சினையை ஸ்ரீலங்காவிற்குள் தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் ஒன்று தேவை என கூறுவோருக்கு எடுத்துரைப்பதற்கு வெளிவிவகார அமைச்சிற்கு பகிரங்கமான சாட்சியாக இது இருக்கின்றது. விசேட நீதிமன்றமொன்று தேவையில்லை என கூற முடியும். நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் மூலம் நன்மையொன்று ஏற்பட்டுள்ளது. எமக்கு விசேட சர்வதேச நீதிமன்றம் ஒன்று அவசியம் இல்லை என்பதை ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் நிரூபித்துள்ளது. நீதி தொடர்பான பிரச்சினை வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ளது. அது தெளிவானது.யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க கூடிய உச்ச நீதிமன்றம் எமது நாட்டில் உள்ளது என்பதை சர்வதேசத்திடம் முன்வைக்க முடியும். அதனை எதிர்காலத்தில் செய்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.
Post a Comment