தீர்ப்பு வந்ததும் அதிரடி காட்டுவோம்


“நாம் ஜனநாயக வழியில் நடப்பதால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் எமக்குச் சாதகமாகவே அமையும். ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். தீர்ப்பு வெளியானவுடன் ஐக்கிய தேசியக் கட்சி சில அதிரடி நடவடிக்கைகளையும் காட்டும். அதை இப்போதைக்கு எம்மால் சொல்ல முடியாது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“எமது கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜனநாயக வழியில் இருக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும். சர்வதேச சமூகம் வரவேற்கின்ற நடவடிக்கையாகவும் அது இருக்கும்.
போலித் தலைமை அமைச்சராலும், போலி அமைச்சரவையாலும் எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்துவிட்டது. நாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். மீண்டும் ஆட்சிப்பீடமேறி நாட்டை மீட்டெடுத்தே தீருவோம். பொருளாதாரத்தை நிமிர்த்துவோம்.
இனிவரும் நாள்கள் முக்கியவத்துவம் வாய்ந்த நாள்களாக உள்ளன. அதற்கேற்ற மாதிரி நாம் செயற்படுவோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments