மட்டக்களப்பில் கைது:கிளிநொச்சியில் சரண்!


மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இலங்கை காவல்துறையினர் கொலை தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாவீரர் தினத்தை தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னின்று செயற்படத்திய ஏற்பாட்டுக்குழு தலைவர் மட்டக்களப்பில் கைதாகியுள்ளார்.அவரது தகவலையடுத்து காவல்துறை தேடிச்சென்றதாக முன்னாள் போராளியொருவர் கிளிநொச்சி வட்டக்கச்சியில் இன்று சரணடைந்துள்ளார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இ.சர்வானந்தன்(47வயது) என்பரை கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இதனிடையே மட்டக்களப்பு காவல்துறை கொலையுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சிக்க வைக்க மீண்டும் சதிகளில் இலங்கை அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.

மாவீரர் தினத்தை முன்னின்று நடத்தியவர்களை சிக்க வைத்து கணக்கு காட்டும் நடவடிக்கையாக இது இருக்கலாமென சொல்லப்படுகின்றது.

இதனூடாக மாவீரர் தினத்தை முடக்க அரசு திட்டம் வகுத்திருக்கலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னைய காலங்களில் அப்பாவிகளை பிடித்து கணக்கு காட்டும் இலங்கை காவல்துறை மீண்டும் புதிய நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியே இக்கைதுகள் என சொல்லப்படுகின்றது.

இதனிடையே கிளிநொச்சியில் சரணடைந்தவர் மட்டக்களப்பிற்கு அண்மைக்காலங்களில் சென்றிருக்கவில்லையென காவல்துறை அறிவித்துள்ளது. 

No comments