மஹிந்தவையே பிடிக்குமென்கிறார் சயந்தன்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புவதாகத் கண்டுபிடித்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன்.

தங்களைப் பொறுத்தவரையில், ஜனாதிபதியின் செயற்பாடு, அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகுமெனவும் அந்தச் செயலுக்காகத்தான் தாங்கள் எதிர்வினை ஆற்றுவதாகவும் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் இந்தச் செயலுக்காக தாங்கள் ஆற்றுகின்ற எதிர்வினை, ஏதாவதொரு விளைவில் முடிவடையலாமெனத் தெரிவித்த அவர், அந்த விளைவு சில சமயங்களில் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவையோ பிரதமர் பதவியில் அமர்த்துவதில் முடிவடையலாமெனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் அமர வேண்டுமென்று முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நினைக்கின்றார்களெனவும் இதற்காக இவ்விருவரும் தங்களை விமர்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்துடன், கடந்த காலங்களில், கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைப்பதில் பிரதானமாக முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இருந்து வருவதாகத் தெரிவித்ததுடன், அவர்கள் கூட்டமைப்பைக் குற்றஞ்சாட்டி, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்குப் பிரசாரம் செய்ய முனைவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments