கருவுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!


சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியபடி நாடாளுமன்றத்தை கூட்டுவாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பு ஆராய்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதியே விடுக்கவேண்டும். வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இயலுமை, சபாநாயகருக்கு இல்லை என்றும் அறியமுடிகின்றது.  
ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சிகளை மேற்கொள்வதாக, செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்தே, ஆளும்தரப்பு மேற்கண்டவாறு ஆலோசித்துவருவதாக அறியமுடிகின்றது.  
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் கீழ், அரசமைப்புக்கு அமைவாக, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை மீறி, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகருக்கு இயலுமை இல்லை. அதேபோல, அரசமைப்பில், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை மீறிச் செயற்படுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்றும் அறியமுடிகின்றது.  
இந்நிலையிலேயே, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஆளும் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அறியமுடிகின்றது.    

No comments