பதவியை துறக்கப்போவதில்லை: அடுத்த நகர்வில் மஹிந்த!


இலங்கைப்பிரதமர் மகிந்தவும் அரசத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
முன்னதாக தனக்கு ஆதரவளிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை இன்று காலை அவசரமாக கூட்டியிருந்த மஹிந்த ராஜபக்ச அதற்காக தங்காலையில் இருந்து விசேட ஹெலியில் கொழும்பு சென்றிருந்தார்.

இதனிடையே தங்காலை நிகழ்வில் உரையாற்றிய அவர் தன்னை பிரதமர் பதவியிலிருந்து எவரும் விரட்டமுடியாதென தெரிவித்தார்.அத்துடன் முறையற்ற விதத்தில் எவரும் தனது கதிரையில் அமர அனுமதிக்கப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ரணிலுக்கு ஆதரவாக சத்தியக்கடதாசி வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு உச்சமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

சிறீதரன் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இதற்கு மறுப்பால் இழுபறி தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று மாலை ரணிலுடன் நடந்த சந்திப்புக்கும் செல்ல சிறீதரன் மறுத்தாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே பிரதமர் பதவிக்கு ரணிலை நியமிக்க ஜனாதிபதி மறுத்துள்ள நிலையில், அடுத்து யாரை நியமிப்பது என்பதில் பேச்சுக்கள் தொடங்கியுள்ளது. சஜித் அல்லது ராஜிதவை நியமிப்பது பற்றி கட்சி மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா , பிரிட்டன் , ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதுவர்கள்; ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து விசேட பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.அரசியல் நெருக்கடியை தணிக்காவிட்டால் இலங்கை பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரலாமென அப்போது எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments