வீங்கி விஸ்தீரணம் பெறுகின்றது வெலிஓயா!


தென்னிலங்கை அரசியல் குழப்பங்களை தாண்டி முல்லைதீவு மாவட்டத்திற்கு மேலதிகமாக வவுனியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலிருந்தும் நிலங்களை ஆக்கிரமித்து வெலிஓயா விஸ்தரிக்;கப்பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

அண்மைக்காலமாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட வெலி-ஓயா பிரிவை சத்தமின்றி விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஒரு வருடம் முன்பு, 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா  தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமடைந்துள்ளதை முல்லைதீவு மாவட்ட செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். கூடுதலாக 47 கிமீ சதுரம் அதாவது 11ஆயிரத்து 639 ஏக்கர் பரப்பளவில் வெலிஓயா உள்ளமை தெரியவந்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரைபடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெலி-ஓயாவைப் பிரத்தியேக சிங்களப் பிரிவு எனக்காட்டியது. வட மாகாணத்தில் வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு இடையிலான திட்டமிட்டு வெலிஓயா உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் வவுனியா மாவட்டத்திலிருந்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும், தமிழ் பிரதேசங்களினை இணைப்பதன் மூலம் வெலிஓயா ஆரம்பிக்கப்பட்டது.முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுராதபுரத்துடன் பொதுவான எல்லை இல்லை.

2017 வட மாகாண புள்ளி விபர கையேட்டில், வெலி-ஓயாவின் நிலத்தின் அளவைக் குறிப்பிடாமல் காலியாக உள்ளது.

கரைதுறைப்பட்டு 728.6 சதுர கி.மீ., ஒட்டுசுட்டான் 618 சதுர கி.மீ, புதுக்குடியிருப்பு 350 சதுர கி.மீ.,மாந்தை கிழக்கு 494 சதுர கி.மீ.,துணுக்காய் 326.3 சதுர கி.மீ. என முல்லைதீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பு 2516.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments